‘உணவுப் பாதுகாப்புக்காக தேசிய கொள்கை – விரைவில் புதிய சட்டம்’

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதில் துல்லியமான தரவுகளைப் பெற வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, தேசிய மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் கிடைக்கும் தரவுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அவற்றை உடனடியாகத் திருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு, தேசிய மட்டம் முதல் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் வரை அனைவரினதும் பங்களிப்பு அவசியமானது என வலியுறுத்திய ஜனாதிபதி, அரச துறையினர் மாத்திரமன்றி தனியார் துறையினருக்கும் இதில் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles