பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஶ்ரீதரன்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.ஊழியர் சேமலாப நிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற கொடுப்பனவுகளையும் உள்ளடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குகின்றோம் என்று கூறுவது வெறும் மாயை ஆகும்.
இதனை தொழிலாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆகவே தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் நாங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.” – என்று குறிப்பிட்டார்.










