“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்த ஜனாதிபதி, அந்த உறுதிமொழியை நிறைவேற்றாது ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றிவருகின்றார்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில் அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் நாட்டுக்கு ஏற்புடையது அல்லவெனவும், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.
எனினும், தற்போது ஒப்பந்தத்தை மாற்ற முடியாது , அவ்வாறு செய்தால் அது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும், நடைமுறையில் இருந்த ஒப்பந்தமே முன்னெடுத்து செல்லப்படும் எனவும் ஜனாதிபதி கூறிவருகின்றார்.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால் 4 ஆம் கட்ட கடன் தவணை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது விடுவிக்கப்பட்டுள்ளது. திடீரென இது எப்படி சாத்தியமானது? எரிபொருள் விலையேற்றம், மின் கட்டணம் அதிகரிப்பு போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்தால்தான் கடன் கிடைக்கப்பெற்றுள்ளது.” – என சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.