சாமிமலையில் தனிவீட்டு திட்டத்துக்கு பணம் வசூலிப்பு – பயனாளிகளுக்கு சிக்கல்!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட  சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்பு திட்டத்தில் பயனாளிகளிடம் பணம் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2018 ஆகஸ்ட்   28ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பழணி திகாம்பரத்தால் மேற்படி தோட்டத்தில் 16 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன .

குறித்த வீடமைப்பு திட்டம் முழுமை பெறாத நிலையில் சுமார் ஒரு வருட காலமாக பிற்போடப்பட்டு தற்போது புதிய அரசாங்கத்தின் மூலமாக, மீண்டும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வீடமைப்பு திட்டத்தில் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பயனாளிகளிடம் ஒப்பந்தக்காரர்களால் பணம் வசூலிக்க படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர் .

அந்த வகையில் வீட்டிற்கு அத்திவாரம் இடுவதற்கு ஒவ்வருவரிடமும் தலா ஆறாயிரம் ரூபாவும், மலசலகூடம் அமைப்பதற்காக பத்தாயிரம் ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வீட்டின் உள்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலுக்கு நிலை பொருத்துவதற்காக ஒவ்வருவரிடமும் 3600/_ ரூபாய் பணம் செலுத்துமாரு கோரப்பட்டுள்ளது .அதன் உண்மையான விலை சுமார் 2400/ ரூபாய் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடமைப்பு திட்டத்தில் தோட்டகமிட்டி முக்கியஸ்தர்கள் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் மூலமாகவே ஒப்பந்தகாரரால் இவ்வாறு பணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

சாமிமலை நிருபர் ஞானராஜ்

Related Articles

Latest Articles