புலிகளுக்கு தேவையானவற்றையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்துவருவதாகவும், இதன்ஓர் அங்கமாகவே மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்குரிய ஏற்பாடு இடம்பெறுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சட்டத்தரணிகளுடன் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
‘ கோல்பேஸ் போராட்டத்துக்கு டயஸ்போராக்களும், புலிகளுமே ஜே.வி.பியினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர். வரலாற்றில் என்றுமில்லாத வகையில் புலிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு இன்று கிடைக்கின்றது எனவும், எனவே, புலிகளுக்கு தேவையானதுதான் தற்போது செய்யப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவை அரச வதிவிடத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகூட இதன்ஓர் அங்கமா என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், தற்போது புலிப்புராணம் பாடி மீண்டெழ முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.