அரசின் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

அரசினால் வழங்கப்படும் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,..

அரசினால் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் மக்களுக்கான அரிசி நிவாரணத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்படுதல் அவசியமாகும். இது விடயமாக அரசின் சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இலங்கையில் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் அதி குறைந்த வருமானம் பெறுபவர்கள் பெருந்தோட்ட மக்களே. அம்மக்கள் தத்தம் வாழ்வியல்களை மேற்கொள்ள முடியாமல் வறுமையின் உச்சக்கட்டத்திலேயே இருந்து வருகின்றனர். அந்நிலையிலும் எம் மக்களுக்கு எந்த வித நிவாரணங்களும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். இனியும் அம்மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது.

அரசினால் வழங்கப்படும் அரிசி நிவாரணத்தில் அம்மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் இவ்விடயத்தில் நான் கூடிய கவனம் செலுத்தி வருகின்றேன். அரசின் போஷாக்கு வேலை திட்டத்திற்கான விசேட குழு ஒன்று பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளது அக்குழுவில் என்னையே தலைவராக நியமித்துள்ளனர். 22 எம்.பிக்கள் உள்ளடங்கிய அக்குழுவில் நான் தலைவராக இருப்பது பெரும் அங்கீகாரம். அக்குழு மூலமாக என் தொப்புள்கொடி உறவுகளான பெருந்தோட்ட மக்களின் உரிமை மற்றும் போஷாக்கான உணவு தொடர்பான வேலை திட்டத்தையும் மேற்கொள்வேன் என்றார்.

Related Articles

Latest Articles