இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் இளையோர்கள் ஒன்றிணைந்து புதிய தலைமுறை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் தேசிய கட்சிகள் தமிழர் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்பட்டு வருகின்றன.
தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதிலும் அதற்கான பேரம் பேசும் சக்தி இல்லாம் இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து மாகாண சபை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும் அந்தப் பிரதிநிதிகள் மக்கள் சார்பாக இயங்கவில்லை என்பது கண்கூடு.
அதேவேளை இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு இருந்தபோதிலும் பெரும்பான்மை கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் தமிழ் கட்சிகளின் இயலாமை காரணமாக தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளது.
தமிழ் கட்சிகள் இதுவரை காலமும் தோல்வியுற்ற உறுப்பினர்களுக்கே மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் அளித்து வருகின்றன. இளையோருக்கான வாய்ப்பு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வருகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த இரத்தினபுரி தமிழர்களின் குரலாக புதிய தலைமுறை அமைப்பு இன்று முதல் அங்குரார்ப்பணம் கொள்கிறது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கல்விச் சமூகமாக, இளையோராக ஒன்றிணைந்து போட்டியிட்டு இரத்தினபுரி தமிழர்களுக்காக குரல்கொடுக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதே புதிய தலைமுறை அமைப்பின் குறிக்கோள் ஆகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் கட்சிகள், வேறு மாவட்டங்களை தளமாகக் கொண்டு, வாக்குக்காகவும் சந்தாவுக்காகவும் மாத்திரமே வெளி வேசத்துடன் இரத்தினபுரி தமிழர்களை அணுகுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில், நீண்டகால நோக்கத்துடன் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கும் அதேவேளை, இரத்தினபுரி மாவட்ட தமிழர்களுக்கு அவர்களே தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பு செயற்படவுள்ளது.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் இந்த அமைப்பு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது