இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்: பிரேசிலில் சம்பவம்

பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வாங்காமல் மனிதன் வாழ முடிவதில்லை. அப்படி, ஒருவகையில் நேர்மையாக கட்டநினைக்கும் மனிதனுக்கோ உடனடி கடன் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் பலவகைகளிலும் பல வங்கிகளிலும் கோடிக்கணக்கில் கடன் பெறுபவர்கள், அதைக் கட்டாமல் வெளிநாடுகளுக்குச் சென்று பதுங்கிவிடும் செய்திகளையும் நாம் ஊடகங்களில் படிக்கிறோம்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மறுபுறம் எதையாவது சொல்லி, அதாவது எப்படியாவது ஏமாற்றி கடன் வாங்கும் முயற்சியில் சில நபர்களும் ஈடுபடுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம்தான் பிரேசிலில் நடைபெற்றுள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினர் பெயரில் வங்கியில் கடன் பெறுவதற்காக சக்கரநாற்காலியில் அமரவைத்து அழைத்து வந்துள்ளார். அந்தப் பெண் 68 வயது ஆணின் மருமகள் எனக் கூறி, அவரது பெயரில் 17,000 ரைஸ் (சுமார் $3,250) கடனாகப் பெற முயன்றார். அந்த நபர், சக்கரநாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், கையெழுத்துப் போடும்போது மரணமடைந்ததுபோல வங்கி ஊழியர்கள் கருதினர்.

இதையடுத்து, ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர். அவர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர்.

உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் எப்படி, எப்போது இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Latest Articles