எட்டு மணித்தியால வேலை நேரத்தை 12 மணிநேரமாக்க முயற்சியா?

தொழிலாளர்களின் எட்டு மணித்தியால வேலை நேரத்தை 12 மணிநேரமாக நீடிப்பதற்கு அரசு முயற்சித்துவருவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலதிகநேர கொடுப்பனவுகளை வழங்காமல் ஊழியர்களிடம் இருந்து 12 மணித்தியாலங்கள் வேலை வாங்குவதற்கு தொழில் அதிபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் யோசனையை அரசு உடன் கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உலகில் ஏனைய நாடுகள் 8 மணித்தியால வேலை நேரத்தை 6 மணிநேரமாக குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கையில் தொழிலாளர்கள் மீது பாரிய சுமையை சுமத்த முற்படுவது அநீதியானது எனவும் இதன்மூலம் மேலதிக கொடுப்பனவை பெறும் உரிமையை தொழிலாளர்கள் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் வேலை வழங்குவதற்கும், மூன்று நாட்கள் சம்பளம் அற்ற விடுமுறை வழங்குவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஞாயிறு விடுமுறையை நீக்கிவிட்டு, வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் அந்த விடுமுறையை எடுப்பதற்கான ஏற்பாடு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும், ஆரம்ப நிலையிலேயே இவ்வாறான பிரேரணைகளை தோற்கடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் மேலும் கூறினார்.

அதேவேளை, இவ்வாறு எந்தவொரு முடிவையும் தொழிற் திணைக்களம் எடுக்கவில்லை என்று தொழில் ஆணையாளர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles