பிரபல வர்த்தகரும், இலங்கை தொழில் கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி. லியனகே விரைவில் மொட்டு கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமானவரான லியனகே, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த மண்கவ்விய பின்னர், தனது ‘பீகொக்’ மாளிகையைக்கூட மஹிந்தவுக்காக வழங்குவதற்கு முன்வந்திருந்தார்.எனினும், காலப்போக்கில் மைத்திரியுடன் சங்கமித்து வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றையும் பெற்றுக்கொண்டார்.
அவ்வப்போது ‘சமாளிப்பு அரசியலுக்காக’ ராஜபக்சக்களை விமர்சித்தாலும் மனதுக்குள் மரியாதையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்.
மஹிந்தவின் மகன் கட்டார் சென்றிருந்தவேளை, விமானநிலையத்துக்கேசென்று வரவேற்பளித்து சர்ச்சையிலும் சிக்கினார்.
கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால் அவரின் கட்சி நுவரெலியாவில் தனித்து களமிறங்கியிருந்தது. தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்கான உபாயமே இதுவெனவும் விமர்சிக்கப்பட்டது.
தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டதால் மொட்டு கட்சியிடம் சரணடைவதற்கு ஏ.எஸ்.பி. லியனகே தயாராகிவிட்டதாகவும், இதற்காக தூதனுப்பியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மைத்திரிக்கு ஆதரவாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மெஹான் லால் கிரேரும் மொட்டு கட்சியுன் விரைவில் இணையவுள்ளார்.