ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நாம் ஓரணியாகவே பயணிக்கின்றோம். இனியும் பயணிப்போம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து செயற்படுவதால் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவின் தன்னிச்சையான முடிவுகளே இதற்கு காரணம் எனவும் தகவல் வெளியாகின.
அத்துடன், சஜித் அணியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியுடனும், மேலும் சிலர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ’43’ எனும் அரசியல் இயக்கத்துடனும் இணைந்து பயணிக்கவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பில் வினவியபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
” மேற்படி தகவல்களை கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் அடியோடு நிராகரிக்கின்றேன். கட்சிக்குள் உள்ளக மோதல் எதுவும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி என்பது அரசியல் கூட்டணியும் ஆகும். மாறுபட்ட கருத்துகளை உடையவர்கள் இருக்கலாம். கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். இது அடிப்படை ஜனநாயக பண்பு. இதனை பிளவு, மோதல் என கூறமுடியாது.
கட்சி தாவல் இடம்பெறவுள்ளது எனக்கூறப்படுவதும் பொய். நாம் ஓரணியாக பயணிக்கின்றோம். இனியும் பயணிப்போம்.” – என்றார்.