கொரோனா தொற்றிலிருந்து எம் மலையக மக்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கடந்த காலங்களில் பிரயாணத்தடை விதிக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் தொற்று காரணமாக மலையகத்தில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது!
ஆனால் இவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுத்து தம்மை காத்துக்கொள்வது என்பது பற்றியோ அல்லது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை விபரங்களோ தெரியாத நிலையில் பெருந்தோட்டத்துறை மக்கள் பதட்டத்திற்குள்ளாகி உள்ளனர்.
நெருக்கமான குடியிருப்புகள், சுகாதார வசதிகள் குறைந்த வாழ்க்கை முறை இவற்றுக்கும் அப்பால் உரிய வைத்திய சிகிச்சைகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை என்பன எம் மக்களின் வாழ்வுக்கு சவால்களாக மாறிகொண்டிருகின்றன.
ஆகவே பெருந்தோட்டத்துறை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தற்காலிக PCR முகாமையும் சிகிச்சை முகாம்களும் அமைப்பதனை அரசாங்கமும் சுகாதார துறையும் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கும் பயந்து எம்மக்கள் தம்மால் முடிந்தளவு சுகாதார நடமுறைகளை பின்பற்றினாலும் கூட கொரோனாவின் அழிவுக்கு முகம் கொடுக்கும் அளவுக்கு எமக்கு சக்தியோ வசதிகளோ இல்லை என்பதுவே உண்மை.
எனவே சுகாதார துறையினரும் அரசாங்கமும் ஒரு அவசரகால தேவையாகக் கருதி கொரோனா சிகிச்சை வசதிகளையும் PCR பரிசோதனை வசதிகளையும் அதிகரித்து எம் மக்களை காக்க வேண்டும். என மேலும் வலியுறுத்தினார்.