“ இலங்கையானது கொரோனா வைரஸ் தாக்கத்தின் சிவப்பு எச்சரிக்கை வலயத்திலேயே இன்னும் இருக்கின்றது. எனவே, மற்றுமொரு அலை உருவாவதை தடுப்பதற்கு அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்று இலங்கை மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இவ்வாறு வலியுறுத்தினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடு என்ற வகையில் நாம் இன்னமும் எச்சரிக்கை மட்டத்திலிருந்து மீளவில்லை. நாளாந்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். 150 மரணங்களும் பதிவாகின்றன. எனவே, அவதான மட்டத்திலிருந்து மீண்டுவிட்டோம் என்பதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. சிவப்பு எச்சரிக்கை வவலயத்திலேயே நாடு இன்னமும் இருக்கின்றது. எனவே, அரசும், நாட்டு மக்களும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்றுமொரு அலை உருவாவதற்கு இடமளிக்ககூடாது. குறிப்பாக மற்றுமொரு அலை உருவாவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.