கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும் என அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான பிரசன்ன குணசேன வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு மக்கள் அதனை பின்பற்றாவிட்டால் மிக மோசமான விளைவுகளை மீண்டும் எதிர்கொள்ள நேரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முகத் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் பொது போக்குவரத்துகளை முடிந்தளவு தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை நாட்டு மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். பாடசாலைகளை திறப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே பாடசாலைகளை திறக்க முடியும்.
அனேக வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாக செய்யப்பட்டிருந்த கை கழுவுவதற்கான தண்ணீர் வசதிகள் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டாலும் அங்கு தண்ணீர் தடைபட்டுள்ளதையும் காண முடிகின்றது.
அதேவேளை பல்வேறு கட்டுக் கதைகளை நம்பி சிலர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் உள்ளமை தெரியவருகிறது. எனவே, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” -என்றார்.