மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நெச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்லடி, நெச்சிமுனையைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரின் மகனான அகிலன் துஷ்யந்தன் (வயது 18) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் துறையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததால் அதனைக் கேட்டு அவரின் தந்தை திட்டினார் என்றும், அதையடுத்து மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டுக் கொண்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூக்கில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
