மஸ்கெலியா காட்மோர் தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று இ.தொ.காவின் உப செயலாளரும், சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழில் உறவுகளுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா, காட்மோர் தனியார் தோட்டம், மற்றுமொரு தரப்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமக்கான சேவைக் கொடுப்பனவை முன்னைய நிர்வாகம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி காட்மோர் பகுதி தொழிலாளர்கள் கடந்த 28 ஆம் திகதி முதல் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காட்மோர் தோட்டத்தின் நிர்வாகம், புதிய நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் என பலரும் சந்திப்பின் பங்கேற்றனர்.
சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட பாரத் அருள்சாமி,
” நாம் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 8ஆம் திகதி தொழிலாளர்களுக்கு சம்பளத்தையும் போனஸ் கொடுப்பனவை வழங்கவும் தோட்ட நிர்வாகம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்தப் பேச்சுவார்த்தையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்.” – என்றார்.
க.கிசாந்தன்
