நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் அடை மழை தொடர்வதுடன் கடும் குளிர் நிலவுகிறது.இதன் காரணமாக வயது முதிர்தோரும், சுவாச நோயுடன் தொடர்புபட்டவர்களும்,சிறுவர்களும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
பசறை பிரதேச செயலாளர் பிரிவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. பெருந் தோட்டங்களில் தொழில் புரிபவர்களும்,கட்டுமானப் பணியாளர்களும் ,நாட்கூலித் தொழிலாளர்களும் இதன் காரணமாக பாதிப்படைந்துள்ளனர் உயர்தர பரீட்சைக்காக நகர்புறங்களில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களுக்கு வருகைத் தரும் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.
அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதோடு,மாலை 6.00 மணிக்கு முன்னரே வானம் இருள் சூழ்ந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில் மண் சரிவு அபாய பிரதேசங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாமென மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பசறை நிருபர்