” சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வொன்றை பெறாமல் நாம் பின்வாங்கப்போவதில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சிவி விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசியலமைப்பு தொடர்பில் தேரர்களுக்கு தெளிவில்லை. எனவே, விகாரைகளுக்குள் முடங்கி ஆன்மீகப் பணிகளை முன்னெடுக்குமாறு கோருகின்றேன். மகாநாயக்க தேரர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நான் திறந்த மடலொன்றை எழுதவுள்ளேன். அதில் எல்லா விடயங்களும் குறிப்பிடப்படும்.
அரசு உறுதிவழங்கியுள்ளது. இடையில் என்ன நடக்கும் என தெரியவில்லை. வழங்க வேண்டியதை கட்டாயம் வழங்க வேண்டும். சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வை பெறாமல் நாம் பின்வாங்கபோவதில்லை.” – எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
