இந்திய குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல்இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தை சேர்ந்த குழுக்களிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களை குறி வைத்தும், பொதுக்கூட்டங்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் நெரிசலான இடங்களையும், இலக்கு வைக்கலாம்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.