” ஹட்டன், போடைஸ் பகுதி வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காவிட்டால் அவ்வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” ஒன்றரை வருடங்களுக்கு முன் இவ்வீதியில் பாரிய கல்லொன்று விழுந்திருந்தது. அதனை அகற்றுவதற்கு மாகாண மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோர்வூட் பிரதேச சபை ஊடாகவே நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.
அதுமட்டுமல்ல மாகாண அதிகாரசபை ஊடாக இவ்வீதியை புனரமைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.விபத்து இடம்பெற்றதும் கதைப்பதில் பயனில்லை, எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைப்பு பணி இடம்பெறவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.
இன்று நடைபெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்து கண்டிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பிரதேச சபை ஊடாக வீதியைமூட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
க.கிசாந்தன்