மஞ்சள் அல்லது மஞ்சள் தூளினை பதுக்கி அதிக விலைக்கு மேல் விற்பனை செய்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என சிறு போக ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் தனக்கு வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடந்து தகவல் தருகையில்,
தற்போதைய சூழ்நிலையில் மஞ்சளுக்கு நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் மக்கள் மஞ்சளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
கடந்தகால நல்லாட்சி அரசாங்கம் முழுமையாக இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை கைவிட்டனர். இதனால் நாட்டில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
மஞ்சள் தேவையினைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாதவாறு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாட்டில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வோம்.
இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன், மஞ்சளின் விலையும் குறைந்துவிடும் என அவர் தெரிவித்தார்.