மலையகத்தில் பாடசாலை மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு பொறிமுறை வகுக்கப்படும் எனவும், இது தொடர்பில் இன்று பாதுகாப்பு மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது எனவும் இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிவருகின்றனர் எனவும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம் பல தரப்பினரும் முறையிட்டனர்.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு ஜீவன் தொண்டமான் கொண்டுவந்தார்.
இந்நிலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இன்று காலை , ஹட்டன் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.

காங்கிரஸின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் , இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டர்.
பாதுகாப்பு தரப்பில், நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும், இதற்கான குழுக்களை அமைக்க வேண்டும் எனவும், மாணவர்களை போதையில் இருந்து பாதுகாப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கட்டளையை மீறும் பட்சத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் மலையக தோட்டப் பகுதிகள் , நகர் மற்றும் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருள் விற்பணை மற்றும் பாவனையில் ஈடுப்படாது காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.
அதேவேளை, தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் பொலிஸார் தலையிடக்கூடாது என இதன்போது ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
