இவ்வருடம் தை மாதம் 29 ஆம் நாள் (பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமகத் திருவிழா விசேட பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி மகேஸ்வர பூஜையும், 6 ஆம் திகதி பஞ்சரதபவனியும், 8 ஆம் திகதி தீர்த்தோற்சவமும், 9 ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தெய்வீகத் திருப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள சகல உதவிகளையும், ஒத்தாசைகளையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ஆலய பரிபாலனசபை உறுப்பினர்களுக்கும், மாத்தளைவாழ் இந்து, பௌத்த பெருமக்களுக்கும், உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் அம்பிகை அடியார்களுக்கும், இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாசி மகோற்சவத்தை முன்னிட்டு மாத்தளை மாநகரம் விழாக்கோலம் பூண்டு வரும் இவ்வேளையில், இம்முறை இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான அம்பிகை அடியார்களின் வருகையை எதிர்பார்த்து இருப்பதால் பாதுகாப்பு ஒழுங்குகள், சுகாதார, போக்குவரத்து வசதிகள், சுற்றுசூழல் மேம்பாடு, குடிநீர் வசதிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலய நிர்வாக சபையினர் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்துள்ளனர்.
குறிப்பாக மாத்தளை மாநகரசபையும், மாவட்ட செயலகமும், பொலிஸ் திணைக்களமும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகின்றன.
அன்பின், அருளின், கருணையின் இரக்கத்தின் அடையாளமாகத் திகழும் எங்கள் மாத்தளை அன்னை முத்துமாரியின் மாசி மக (2023) சகல உற்சவங்களிலும் கலந்து, அம்பிகையின் அருளையும், நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் பெற்று சகல சௌபாக்கியத்துடன் வாழ அம்பிகையை வேண்டி நிற்கின்றோம்.
2014 இல் இருந்து 2018 வரை தேவஸ்தானத்தின் அங்கத்தவராகவும் பொருளாளராகவும் இதயசுத்தியுடனும், பக்திபூர்வமாகவும், தூய்மையாகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எனக்கு 2020 முதல் தற்போது வரை தேவஸ்தான தலைவராக பணியாற்றுவதற்கு பாக்கியம் கிடைத்தமை அன்னையின் பெரும்பேறாக கருதுகின்றேன்.
காசியில் விசாலாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும் குடிகொண்டருளும் அன்னை, மாத்தளையில் முத்துமாரியாக அமர்ந்து அருள் புரிவது நாம்கொண்ட பேறாகும்.
வாருங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் வடம் பிடிப்போம்! வளமான வாழ்வு பெறுவோம்!
