முரளியின் கோரிக்கையை ஏற்று 800 படத்தில் இருந்து விலக விஜய் சேதுபதி முடிவு!

முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

நெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் சேதுபதி இதற்கு விளக்கமளித்தார். அதில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் 800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும், நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முத்தையா முரளிதரன் மீண்டும் இந்த விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி… வணக்கம்… என விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles