ஹட்டன் – போடைஸ் வீதியில் தொடர் விபத்துகள்! காரணம் என்ன?

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பாதை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாகவும், எனவே, வீதியை புனரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ், டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் 02.10.2020 அன்று காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயமடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் கவலையுடனும், கொதிப்படைந்த நிலையிலும் காணப்படுகின்றனர். வீதி அகலப்படுத்தப்படாததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

” இவ்வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம். இதற்கு முன்னரும் விபத்துகள் இடம்பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கின்றனர். தொழிலுக்கு செல்பவர்களும் இருக்கின்றனர். விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர். எனவே, இனியும் விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக வீதியை அகலப்படுத்திக்கொடுப்பதற்கும், குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலு,

” ஒன்றரை வருடங்களுக்கு முன் இவ்வீதியில் பாரிய கல்லொன்று விழுந்திருந்தது. அதனை அகற்றுவதற்கு மாகாண மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோர்வூட் பிரதேச சபை ஊடாகவே நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

அதுமட்டுமல்ல மாகாண அதிகாரசபை ஊடாக இவ்வீதியை புனரமைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.விபத்து இடம்பெற்றதும் கதைப்பதில் பயனில்லை, எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைப்பு பணி இடம்பெறவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இன்று நடைபெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்து கண்டிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பிரதேச சபை ஊடாக வீதியைமூட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles