2ஆம் புவனேகபாகு மன்னன் குறித்து மஹிந்த வெளியிட்ட கருத்தால் மனோ சீற்றம்!

நாட்டில் தற்போது இனவாத ஆட்சியே இடம்பெற்றுவருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” குருணாகலையில் இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரசசபை தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மொட்டு கட்சியை சேர்ந்த மேயர் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார். இது குற்றமாகும். தொல்லியல் பெறுமதிமிக்க இடத்தை தரைமட்டமாக்கிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஆனால், குறித்த மேயர் தனது கட்சி உறுப்பினர் என்பதால் அவரை பாதுகாக்கும் விதத்தில் பிரதமர் கருத்து வெளியிடுகின்றார்.   புவனேகபாகு மன்னன் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளதால், அவர் பெரிய மன்னன் கிடையாது என்ற விம்பத்தை உருவாக்கும் விதத்தில் கருத்து வெளியிடுகின்றார். பிரதமர் பதவியை வகிப்பவர் இவ்வாறு கருத்து வெளியிடுவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும். இதனால் கவலையடைகின்றேன்.

கண்டி இராஜ்ஜியத்தை கடைசியாக தமிழ் மன்னர் ஒருவரே ஆண்டார். இந்தியாவுக்கு சென்று மக்கள் அவரை அழைத்துவந்து அக்கிராசனத்தில் அமரவைத்தனர். அன்று மக்களிடம் இனவாதம் இருக்கவில்லை. இந்த ஆட்சியில்தான் இனவாதம் பரப்பப்படுகின்றது.” – என்றார்.

-44-

Related Articles

Latest Articles