22 மாலை வாக்கெடுப்பு – ’20’ நிறைவேற்றுவதில் அரசுக்கு திண்டாட்டம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை திரட்டுவதில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்ததுபோல் அல்லாமல் பல திருத்தங்களுடனேயே ‘20’ ஐ நிறைவேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைத்தன. ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஈ.பி.டி.பிக்கு இரு ஆசனங்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், தேசிய காங்கிரசுக்கு ஒரு ஆசனமுமாக ஆளுங்கூட்டணி வசம் 149 எம்.பிக்கள் இருக்கின்றனர்.

இதில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாக்கெடுப்பதில் சர்ச்சை நீடிக்கின்றது, சபாநாயகரும் நடுநிலை வகிக்ககூடும். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை (150) பெறுவதற்கு கட்டாயம் எதிரணி எம்.பிக்கள் சிலரின் ஆதரவு அவசியம். அதற்கான நடவடிக்கையில் தற்போது பஸில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளதால் ஆளுங்கட்சியில் உள்ள கத்தோலிக்க எம்.பிக்களும் ‘20’ விடயத்தில் தாம் முன்பு எடுத்திருந்த முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களும் திருத்தங்கள் முன்வைத்துள்ளனர். எனவே, ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்ததுபோல் அல்லாமல் பல திருத்தங்களுக்கு மத்தியிலேயே அரசு ‘20’ ஐ நிறைவேற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது அரசுக்கான பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும். 21,22 இல் விவாதம் நடத்தப்பட்டு 22 மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Related Articles

Latest Articles