4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகவாறு காரணமாக தனது நான்கு வயது மகனுடன் தாயொருவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் (16.01.2025) நேற்று மாலை குதித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த தாய் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் காணாமல் போயிருந்தார். இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

41 வயதான குறித்த பெண் கணவரை பிரிந்து பூண்டுலோயா பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாழ்ந்துள்ளார். அந்நபர் மற்றுமொரு திருமணம் செய்துகொள்வது தொடர்பில் எழுந்த பிரச்சினையாலேயே இப்பெண் தற்கொலை செய்துகொள்வதற்கு முற்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles