” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தர தொழிற்சங்கங்களும் மலையக அரசியல்வாதிகளும் ஓரணியில் திரள வேண்டும். அதன் ஊடாக இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முடியும்.”
– இவ்வாறு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,
” தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அமைச்சரவையின் அனுமதி ஊடாக 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை கம்பனிகள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் கம்பனிகளுடனும் தொழில் அமைச்சர் பேச்சுகளை நடத்தி வருகிறார். இந்த பேச்சுகளில் தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். ஆனால், இன்னமும் 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
கம்பனிகள் அரஜாக போக்கில் செயல்படுமானால் அது கண்டிக்கத்தக்கது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்ட தரப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
அதன் காரணமாகவே விரைவாக இவர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் முனைப்பில் ஜனாதிபதியும் உள்ளார். நேற்றுமுன்தினம் முதலாளிமார் சம்மேளனத்துடன், இதுதொடர்பான பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டோம்.
தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க வேண்டியதற்கான காரணங்களையும் தேவையையும் இதன்போது நான் பட்டியலிட்டிருந்தேன். அதற்கு அவர்கள் ஓரளவு செவி சாய்த்திருந்தனர்.
ஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே விரைவாக சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடியும்.” என்றார்.










