ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு தமது கட்சியில் இனி இடமளிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்படி அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எமது அணியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் உள்ளே எடுக்கமாட்டோம். பலமானதொரு இரண்டாம் அணி உருவாகியுள்ளது. தம்மால் சிறப்பாக செயற்பட முடியும் என்பதை அவர்கள் செயல்மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னர் இருந்தவர்களைவிடவும் திறமையாக செயற்படுகின்றனர். எமக்கும் இதுதான் தேவைப்படுகின்றது.
செப்டம்பர் 22 ஆம் திகதி நாமல் ஜனாதிபதியானதும், புதிய இளைஞர்களுடன் அவர் பயணிப்பார்;. அதற்கான களம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வேண்டாம் எனில் தமக்கும் வேண்டாம் எனக்கூறி சலூன் கதவை மஹிந்த பூட்டிவிட்டார்.” –என்றார்.
