” இலங்கை கடற்படையினருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய மீனவர்கள் செயற்பட்டுள்ளதுடன், துப்பாக்கியை பறிப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.” – என்று கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
கடற்படையினரின் சமிக்ஞைகளுக்கு கட்டுப்படாததாலேயே இரு கடற்படையினர், மீனவர்களின் ரோலர் படகை நெருங்கி செல்ல வேண்டி ஏற்பட்டது எனவும், இதன்போது 13 மீனவர்களும் கடற்படையினரை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளனர் எனவும் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘இலங்கை கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கப்பல்கள், தேசிய கடல் எல்லை பாதுகாப்புக்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. ராடருக்குள் தென்பட்ட கப்பல்கள் தொடர்பில் மேலதிக விசாரிப்பதற்காகவே அவை சென்றிருந்தன.
ராடருக்குள் தென்பட்ட பகுதிக்கு சென்ற அதிகாரிகள், அவை இந்தியாவுடன் தொடர்புடைய படகுகள் என்பதை கண்டறிந்துகொண்டனர். இதனையடுத்து இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இலங்கை கடற்பரப்புக்குள் கடற்றொழலில் ஈடுபட அவர்களுக்கு (இந்திய மீனவர்கள்) அனுமதி இல்லை என்பதால் எல்லையில் இருந்து வெளியேறுமாறு ஒளி மற்றும் ஒலி மூலம் கடற்படையினரால் சமிக்ஞைகள் செய்யப்பட்டன.
எனினும், சம்பந்தப்பட்ட ரோலர் படகு சமிக்ஞைகளுக்கு கட்டுப்படாது, தொடர்ந்து செயல்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் ஏற்பட, அதனை பரிசோதிப்பதற்காக படகின் அருகில் சென்று நிறுத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டளை பிறப்பிப்பதற்கு முன்னர் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை சமிக்ஞைகள் விடுக்கப்பட்டிருந்தன. அதற்கு கட்டுப்படாமல், ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே அருகில் சென்று, தேடிபார்க்க வேண்டியேற்பட்டது.
இரு அதிகாரிகள்தான் முதலில் ரோலர் படகுக்குள் சென்றிருந்தனர். படகை நிறுத்துவதற்கு படகின் பைலட் ஹவுஸ் பகுதிக்கு சென்றபோது அங்கிருந்த இந்திய நபர்கள் தாக்க முற்பட்டுள்ளனர். சுற்றிவளைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் அவர்களை எடுக்க முற்பட்டுள்ளனர். ஆயுதத்தை பிடுங்குவதற்கு முற்பட்டுள்ளனர். இதனையடுத்து துப்பாக்கி இயங்கியுள்ளது.
இதனால் இரு இந்திய மீனவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக மருத்து சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படகுக்குள் சோதனை நடத்தியபோது, மீன்கள் இருந்துள்ளன. எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து பிடிக்கப்பட்டவை அவை.
கடற்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அத்துமீறி செயல்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் ஏனைய மீனவர்களை முகாமுக்கு கொண்டுவந்தோம். அதன்பிறகு பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.
காயமடைந்த இரு மீனவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை வழங்கி, மற்றுமொரு படகில் கொண்டுவந்து யாழ். வைத்தியசாலையில் அனுமதித்தோம். அவர்கள் தற்போது குணமடைந்துவருகின்றனர்.
கடல் தன்மையால் ஒரே தடவையில் அனைத்து அதிகாரிகளும் படகுக்குள் செல்ல முடியாது. எனவேதான் படகை முதலில் நிறுத்துவதற்காக இருவர் சென்றனர். 13 பேருக்கு மத்தியில் இருவர் சென்றபோது அவர்கள் வன்முறையாக நடந்துகொண்டதால்தான் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.” – என்றார்.
அதேவேளை, கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல், ஆயுதம் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் என்பன இடம்பெறுவதால், எமது கடற்பரப்புக்குள் கப்பலையும் சோதனைக்குட்படுத்தும் அதிகாரம் எமக்கு உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்று என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதன்போது கூறினார்.
