பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
கடந்த மழைக்காலத்தின் போது, பண்டாரவளை நகரின் ஒரு பகுதி மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இது தொடர்பாக பண்டாரவளை மாநகர சபை மீது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, நகரின் வடிகால் அமைப்பிலுள்ள அடைப்புகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறியும் நோக்கில் நேற்று இரவு (15) சிறப்பு ஆய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
நடைபாதைகளின் கீழ் இக்கால்வாய்கள் அமைந்துள்ளதாலும், ஆய்வு செய்யும் போது கடுமையான துர்நாற்றம் வீசக்கூடும் என்பதாலும், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பின்னரே இந்த நள்ளிரவு நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது, நகரில் நீண்டகாலமாக நிலவி வந்த கடுமையான துர்நாற்றத்திற்குக் காரணமாக இருந்த பிரதான கால்வாயில், சில வர்த்தக நிலையங்கள் தங்களின் கழிவறை கழிவுகளை நேரடியாக வெளியேற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை முற்றிலும் புறக்கணித்துச் செயற்பட்ட 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவே தற்போது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களின் சட்டவிரோத கழிவுநீர் குழாய்களை அகற்ற ஒத்துழைக்க மறுத்த 4 வர்த்தக நிலையங்களின் குழாய்கள், பண்டாரவளை நகர மேயர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) முன்னிலையில் உடனடியாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன.
நகரிலுள்ள இன்னும் மீதமுள்ள வர்த்தக நிலையங்களும் எதிர்வரும் நாட்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
– பதுளை பிராந்திய செய்தியாளர்: சுரேஷ்குமார்










