சிறைச்சாலை ஆணையாளர் கைது: பதறுகிறது மொட்டு கட்சி!

” அரச நிறுவனங்களின் பிரதானிகளை சிறையில் அடைத்து இலங்கையில் வடகொரியா போன்றதொரு நிலைமையை தோற்றுவிட்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இந்நாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் மூன்று நிறுவனங்களின் பிரதானிகள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிறையில் இருந்தார். தற்போது சேவையில் இல்லை. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பிரதானிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடொன்றுக்கு இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்புடையது அல்ல. இப்படியானதொரு நிலை ஏற்பட்டமை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்படும்.

சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை அவமானத்துக்குட்படுத்தி, சிறையில் அடைப்பதன்மூலம தற்போதைய நிர்வாக முறைமையை வீழ்த்துவதற்கு அரசாங்கம்முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளை கைது செய்யும்போது, விளக்கமறியலில் வைக்கும்போது கூடுதல் கரிசனை செலுத்தப்பட வேண்டும்.

ஏனெனில் அத்துறை சார்ந்து நம்பிக்கையீனம் ஏற்பட்டு, கட்டமைப்பு வீழ்ச்சியடையக்கூடும். ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு – எமக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை விடமாட்டோம் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

எனவே, ஜே.வி.பியினர் இலங்கையில் வடகொரியா போன்றதொரு நிலையை ஏற்படுத்தி – தமது சகாக்கள் ஊடாக நாட்டை ஆளமுற்படுகின்றனரா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.” – என மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles