பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் 16 பேர் கொண்ட இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதைகளை இதன்மூலம் ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத்தவிர மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களால், நிறுவன முகாமைத்துவத்தினால் அல்லது வேறுதரப்பினரின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான துன்புறுத்தல்கள் மற்றும் அந்த தரப்பினரால் பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றையும் தடுப்பது இந்த செயலணியின் நோக்கமாகும்.
விரைவில் இந்த செயலணியின் கீழ் பல்கலைக்கழக மட்டத்திலும் ஏனைய உயர்கல்வி நிறுவன மட்டத்திலும் பிரிவுகளை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
