உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க , பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டு இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, ஜேர்மன் ஜனாதிபதி மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்ஸாண்டர் ஸ்டப், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உள்ளிட்டோர் கையெழுத்து போட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அலாஸ்காவில் ரஷ்ய ஜனரிபதி புடினை சந்தித்து பேசிய பிறகு எங்களிடமும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடமும் டிரம்ப் விளக்கம் அளித்தார்.
உக்ரைனில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலை நாட்டவும் ; டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம் என்று மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” போர் நிறுத்தம் முடிவாகும் வரை எந்த ஒப்பந்தமும் கிடையாது’ என டிரம்ப் கூறியுள்ளார். அவர் கூறியபடி அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் சேர்த்து கொள்ள வேண்டும். ஐரோப்பா ஆதரவுடன், முத்தரப்பு பேச்சு நடக்க டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கிறோம்.
உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.
அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தயாராக உள்ளது என்ற அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” – எனவும் மேற்படி கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.