அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியின் கீழ், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.
அபுதாபி நகரில் அண்மையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் எட்டப்படவில்லை என வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போர் நிலைக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா இரு நாடுகளுக்கும் அழுத்தம் வழங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே ஜெனீவா சந்திப்பு நடைபெறுகிறது.
அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், களத்தில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கிழக்கு உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸெலென்ஸ்கி, அங்கு உக்ரைன்–ஜெர்மனி இணைந்து நிறுவியுள்ள ட்ரோன் உற்பத்தி ஆலையை பார்வையிட்டுள்ளார்.
ஜெனீவா பேச்சுவார்த்தை, நீண்டகாலமாக நீடிக்கும் இந்த இரத்தச் சண்டைக்கு முடிவுக் கட்டுமா என்ற கேள்வி உலக கவனத்தை ஈர்த்துள்ளது.










