காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது என்பது இன்னும் வெகுதூரத்தில் உள்ளது என்பதைக் கோடிட்டுக்காட்டும் இத்தகவல்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்காக 2017ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவடைந்த நாளில், முல்லைத்தீவில் வீதியில் இறங்கி, தனது தந்தைக்கு நீதி கோரிப் போராடும் யுவதி ஒருவரினால் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சர்வதேச மகளிர் தினத்தன்று வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பங்கேற்புடன், தமிழ்த் தாய்மார்கள் தமது அன்புக்குரியவர்களைப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த வட்டுவாகல் பாலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டப் பேரணியில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினரான சதுர்ஜனா, தனது தாயாரால் அரசாங்கப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது தந்தைக்கு மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அண்மையிலும் ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“2009 யுத்தத்தின் போது அம்மா அப்பாவை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அம்மா சொன்னார். அதற்குப் பிறகு எமக்கு எதுவுமே தெரியாது. இத்தனை வருடங்களாக அப்பா எங்கே என்ற கேள்விக்கு பதிலே இல்லை. அண்மையிலும் அப்பாவுக்கு மரணச் சான்றிதழ் எடுக்குமாறு ஒரு கடிதம் வந்தது. எமக்குச் சரியான முடிவொன்று இல்லாமல் நாம் ஏன் மரணச் சான்றிதழை எடுக்க வேண்டும்? எமது அம்மா அப்பாவை இராணுவத்திடம் ஒப்படைத்தார். இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை. இவ்வளவு காலமாகப் பதில் வழங்காத அரசாங்கத்திற்கு நாம் ஏன் அப்பாவுக்கு மரணச் சான்றிதழ் எடுக்க வேண்டும்? நாம் அதனை எடுக்கமாட்டோம். எமது அப்பா எங்கே என்று சொல்லும் வரை நாங்கள் அதை எடுக்க மாட்டோம்.”

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது நெருங்கிய உறவினர்களுக்குத் தற்போதைய ஆட்சியின் கீழாவது நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையிழந்திருக்கும் நிலையில் தனது தந்தைக்கு நீதி கோரிப் போராடும் சதுர்ஜனா ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேலும் கூறுகையில், வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவினர்களின் கதி வெளிப்படுத்தப்படும் வரை அடுத்த தலைமுறையும் கூட அவர்களுக்காக நீதி கோரும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

“இப்போது அனுர வந்து புதிய புதிய சட்டங்களைப் போட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். நான் ஒவ்வொரு வருடமும் ஒரேயொரு கேள்வியைக் கேட்கிறேன், எங்கள் அப்பா எங்கே? இவ்வளவு காலமாக எங்கள் அப்பா வருவார் என்று அம்மா எதிர்பார்ப்புடன் இருக்கிறார். நாங்களும் அந்த எதிர்பார்ப்பிலேயே இருக்கிறோம். எங்கள் அப்பா இல்லையென்றால் அதுவும் பரவாயில்லை. நீங்கள் ஏதோ ஒன்று செய்திருக்கிறீர்கள்…

நாட்டின் நிலைமை… அவையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் சிறிய பிள்ளைகளாக இருந்தோம், எமக்கு எதுவும் புரியவில்லை. நாங்கள் பலவற்றைத் தாண்டி வந்துவிட்டோம். இனிமேல் எங்களுக்கு ஒரேயொரு கேள்விக்கு மாத்திரம் பதில் வேண்டும். எங்கள் அப்பா எங்கே? எங்களுக்கு எங்கள் அப்பா வேண்டும். அவர் இல்லையென்றால் அதற்குப் பதில் வேண்டும். அவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்குக் பதில் வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உயிரோடு இருக்கும் வரை, இங்கே என் தங்கை இருக்கிறாள். அடுத்த தலைமுறை வரை இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்போம். இனிமேல் வரும் தலைமுறை வரை இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்போம். எங்களுக்கு ஒரு பதில் கிடைக்கும் வரை நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம்.”

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு யுத்தம் இரத்தக் கறைகளுடன் முடிவுக்கு வந்த நாள் முதல் காணாமலாக்கப்பட்ட தம் கணவன்மார்கள், புதல்விகள், புதல்வர்கள், சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்களைத் தேடி 2017ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களை ஆரம்பித்த தமிழ்ப் பெற்றோர்களில் குறைந்தது 400 பேராவது இதுவரை நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமலாக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களுக்காக நீதி கோரும் தொடர் போராட்டத்தின் 9 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ்த் தாய்மார்கள் தமது அன்புக்குரியவர்களைப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த வட்டுவாகல் பாலத்தின் ஊடாக முன்னெடுத்த போராட்டப் பேரணியில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களுக்கு ஒருவரைக் கூடக் கண்டுபிடித்துக் கொடுக்கத் தவறிய, 2018 பெப்ரவரி 28 அன்று நிறுவப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) மீது பாதிப்புக்குள்ளானவர்களில் எவருக்குமே நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்டார்.

“அவர்கள் OMP என்று ஒன்றை கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தவர்களிடம் எங்கள் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் விடயங்களைத் தெளிவுபடுத்தியது. மிகவும் தெளிவான சாட்சியங்களுடன் ஐந்து நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின்னர் நாங்கள் வழங்கிய அந்த ஆவணங்களைக் கூட அவர்கள் காணாமலாக்கியிருந்தார்கள். அதன் பின்னர் நாம் அவர்களை எவ்வாறு நம்புவது என்ற உணர்வுதான் எங்களுக்கு ஏற்பட்டது.”

இம்முறை சர்வதேச மகளிர் தினம் வடக்கு கிழக்கு பெண்களுக்குத் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும் என்பதை நினைவூட்டிய சுப்பிரமணியம் பரமானந்தம், நீதிக்காக அவர்கள் சர்வதேசத் தலையீட்டையே எதிர்பார்ப்பதாக ஊடகவியலாளர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

“அன்று முதல் இன்று வரை நாம் சர்வதேசத்தையே நம்புகிறோம். சர்வதேசம் எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். நாம் சர்வதேச சமூகத்திடம் கோருகிறோம், சர்வதேச அமைப்புகளிடம் கோருகிறோம். எங்களைக் கண் கொண்டு பாருங்கள். எமக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையைப் பாருங்கள். எனவே சர்வதேசம் எங்களைப் பார்த்து எங்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாருங்கள். இன்று சர்வதேச மகளிர் தினமாக இருந்தாலும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு இன்றைய தினம் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும்.”

நீதி கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தற்போது நாட்டில் நடைமுறையிலுன்ன பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் (PTA) பயன்படுத்திய அரசாங்கம், இப்போது அதற்காக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) என்ற சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் தமிழ் மக்கள் அது குறித்து மிகவும் அவதானிப்புடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டுமென, போராட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இலங்கை அரசாங்கம் எமது உறவினர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. இன்று வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் உள்ளது.

அந்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் கைதுகளை மேற்கொண்டு எமது போராட்டத்தை ஒடுக்கும் அரசாங்கம், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டம் என்ற புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகின்றது. எனவே எமது போராட்டங்களை ஒடுக்கி, எமது உறவினர்களைத் தேட இடமளிக்காமல், இந்நாட்டிற்குள் தனது ஆட்சியைப் பலவந்தமாக முன்னெடுப்பதற்காக இந்த அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றது.”

தற்போது நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைத் மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 29,069 கையொப்பங்கள் இடப்பட்ட ஆவணம் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைப்பதற்காக பெப்ரவரி மாத இறுதியில் தமிழ் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணம் தபால் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.

இனப்படுகொலையின் நினைவுச் சின்னத்தைப் போன்ற வட்டுவாகல் பாலத்தைக் கூட அபிவிருத்தி என்ற போர்வையில் அழிப்பதற்கும், தமிழ் இனப்படுகொலையின் அடையாளமே இல்லாமல் துடைத்தெறிவதற்கும் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிவானந்தன் ஜெனிற்றா இதன்போது அரசாங்கத்தின் மீது மேலும் குற்றம் சாட்டினார்.

உலகத் தரம் வாய்ந்த நடிகர்கள்

தற்போது மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரின் தரப்பினர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்படுகொலையின் பங்காளர்கள் என்பதைப் போராட்டத்தில் கலந்துகொண்டு நினைவூட்டிய வன்னி மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு கிழக்கில் சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு அழிவை ஏற்படுத்துவதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மத்திய கிழக்கு போர் நிலைமை குறித்துக் கவலையடைந்து உலகத் தரம் வாய்ந்த நடிகர்களைப் போல நடிப்பது வேதனைக்குரியது எனத் தெரிவித்தார்.

“அண்மையில் ஒரு யுத்தம் நடந்தது. இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. அது தெரியும். அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோரும். எங்களுக்கு அழிவை தேடித்தந்தவர்கள்தான். அது ஒரு பக்கம். ஆனால் மனிதாபிமானம் என்ற வகையில் சிறுவர்கள், சிறுவர்கள், பெண்கள் பாதிப்புக்குள்ளாக்கக்கூடாது. துன்புறுத்தக்கூடாது, அவர்களை அழிக்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழர்களிடம் மனிதாபிமானம் நிறையவே இருக்கிறது.

ஆனால் எங்கள் நிலத்தில் குண்டு போட்டு எங்களை அழித்த மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச கோஷ்டி சிறுவர்கள், சிறுவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அந்நிய நாடுகளைப்பற்றி கதைக்கிறார்கள். நாங்கள் பக்கதில்தானே இருந்தோம்? இப்படி எங்களை அழிக்கும்போது உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. இப்போது நீங்கள் உலக மகா நடிகர்களாக நடிப்புத்திறனை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் வேதனையாக இருக்கிறது.”

தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கி மிக விரைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது தற்போதைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

“இந்த அரசாங்கமாவது வந்தவுடன் ஒரு மாறுதலாக எங்களுக்கு அதை செய்யும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நாங்கள் கதைத்து விட்டோம். கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இவர்களும் அதற்கான முடிவுகளை தரவில்லை. முடிவுகளை விரைவில் தந்து இந்த மக்களுக்கு இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு. உங்களது இலங்கை அரசாங்கத்தின் எல்லைப் பரப்புகளில் நாங்கள் பூர்வீக தமிழர்கள்.

அப்போது எங்களை தவிர்த்து இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் தான் என்று சொல்ல முடியாது. சிங்களவர், தமிழர், முஸ்லிம் எல்லா மக்களுக்கும் உரியது இந்த நாடு என்றால் நாங்கள் உங்களுடைய பிரஜைகள். எங்களுக்கான நீதி நியாயத்தை நீங்கள் வழங்கத்தான் வேண்டும். அதை தாமதிக்காமல் வழங்கி கூடிய விரைவில் இந்த உறவுகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

யுத்தம் முடிவடைந்தபோது அரச இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தம் உறவினர்களுக்கு நாட்டுக்குள் நீதி கிடைக்கவில்லை எனக் குற்றம் சுமத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், சுமார் பதினேழு வருடங்களாக நீதிக்கான சர்வதேசத் தலையீட்டையே ஒருமித்த குரலில் கோரி வருகிறது.

Related Articles

Latest Articles