ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள புஜாயிரா துறைமுகத்தின் மீது ட்ரோன்கள் மூலம் ஈரான் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்கிய போர் இன்று 16 ஆவது நாளாக நீடிக்கின்றது.
இப்போரில் ஈரானின் ராணுவ தளங்கள், போர்க் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இதனிடையே உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை தடுக்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தின.
துறைமுகம் மீது ட்ரோன்களால் ஈரான் படைகள் தாக்கியபோது அமெரிக்கப் படைகள் அந்த ட்ரோன்களை இடைமறித்துத் தாக்கின. இதன் காரணமாக கீழே விழுந்த ட்ரோன்களின் பாகங்களால் அங்கிருந்த எண்ணெய்க் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்தன.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே இந்த முக்கியமான புஜாயிரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் கப்பல்களுக்கு எண்ணெய் வகைகளை ஏற்றிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
