மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற கொ#லை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து மயக்க மருந்துப் போத்தல்கள் மற்றும் மாத்திரைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர், நேற்று நள்ளிரவு சந்தேகநபர்களை அவர்களின் காஞ்சிரன்குடா இல்லத்திற்கு அழைத்துச் சென்று தீவிர தேடுதல் நடத்தினர். இதன்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த வீரியம் மிக்க மயக்க மருந்துப் போத்தல்கள் மற்றும் குளிசைகள் மீட்கப்பட்டன.
விசாரணைகளின் போது, குறித்த மயக்க மருந்துகளை மற்றுமொரு ஓட்டோ சாரதிக்கும் வழங்கியதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த குறித்த ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த அதிவீரியம் மிக்க மயக்க மருந்துகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய மேலும் பல நபர்கள் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சந்தேகநபர்களைக் கொண்டு விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பாழ்ங்கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தாயும் பிள்ளையும் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்










