அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி,
“தற்போது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் போர்நிறுத்தம் தொடங்கியுள்ளது. எனவே, முன்பு இருந்தது போலவே, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் முழுமையாக மீண்டும் விதிக்கப்படுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
மேற்கு ஆசியப் போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், அதனை சமாளிப்பதற்காக அமெரிக்கா கடந்த மாதம் ரஷ்யா எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தியது.
இதன்மூலம் கடலில் இருந்த ரஷ்ய எண்ணெயை ஏப்ரல் 11 வரை வாங்கிக்கொள்ள உலக நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை ரஷ்யா வரவேற்றது.
அமெரிக்கா அளித்த விலக்கு காரணமாக பல உலக நாடுகள் ரஷ்ய கப்பல்களில் இருந்து எண்ணெய் வாங்கின. மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது காரணமாக, இந்த எண்ணெய் வர்த்தகம் மூலம் ரஷ்யாவுக்கு வருமானம் அதிகரித்தது.
உக்ரைனுக்கு எதிராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போர் மற்றும் சர்வதேசத் தடைகளால் காலியாகியிருந்த ரஷ்யாவின் கருவூலம் இதன் மூலம் மீண்டும் நிரம்பியது கவனிக்கத்தக்கது.










