டி.சந்ரு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.
ஆலயத்துக்கு வந்த இந்திய துணை ஜனாதிபதியை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய அறங்காவலர் சபை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து ஆலயத்தின் பிரதம குருக்கள் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்ததுடன் துணை ஜனாதிபதிக்கு ஆசீர்வதமும் வழங்கப்பட்டது.
இந்திய துணை ஜனாதிபதியின் சீதையம்மன் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் , உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச் செல்வி , இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் உட்பட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.










