முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியுடன் நுவரெலியாவில் கைது!

“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிரேமலால் ஜயசேகர தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இந்நிலையில் அவிசாவளை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த தரப்பினருடன், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் , நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கை துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் 2025 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளது.

சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

டி. சந்ரு

Related Articles

Latest Articles