பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலை என்பது மிக முக்கியமான வைத்தியசாலையாகும்.
பொகவந்தலாவ, பொகவான, கொட்டியாகல, லொய்னோர்ன், கெர்கஸ்வோல்ட், வெஞ்சர் ஆகிய கிராம சேவகர் பிரிவிலிருக்கும் 50,000 க்கும் மக்கள் இதன்மூலம் சுகாதார சேவையை பெறுகின்றனர்.
அண்மைக்காலமாக இந்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிஸெபென்சரி தரத்திற்கு தரம் குறைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.
தற்போது காயங்களுக்கு மருந்து கட்டுவதற்கு கூட தாதியர் பற்றாக்குறை என காரணம் காட்டி கிளங்கன் வைத்தியசாலைக்கு நோயாளைகளை செல்லுமாறு அறிவித்தல் போடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளின் அறைகள்வரை கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் சரளமாக இடம்பெறுகின்றன என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவசர இரத்த, சிறுநீர் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லை. பிரத்தியேகமாகவோ, கிளங்கன் வைத்தியசாலையிலோ செய்ய வேண்டியுள்ளது.

சாதாரண நோய்களுக்குக்கூட நோயாளிகளை கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கான சுமை குறைக்கப்பட வேண்டுமாயின் பொகவந்தலாவை போன்ற பிரதேச வைத்தியசாலைகள் தரம் உயரத்தப்பட வேண்டும். அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆதார வைத்தியசாலையின் கிளை போன்று செயற்பட்டு வந்தால் மக்கள் இன்னும் இன்னும் அசௌகரியங்களுக்கு உள்ளவார்கள்.
பொகவந்தலாவை வைத்தியசாலை ஒரு காலத்தில் பிணவறை முதல்கொண்டு இயங்கிய வைத்தியசாலையாகும்.
அரசாங்க தரப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அதைவிடுத்து நோர்வூட் பிரதேச செயலகம் மாற்றப்பட்டபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுபோல் இதனை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க கூடாது என தொழிலாளர் தேசிய சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுப்பையா கமலதாசன்
பிரதி பொதுசெயலாளர்
தொழிலாளர் தேசிய முன்னணி
குறிப்பு – (பொகவந்தலாவை வைத்தியசாலையில் நிலவும் குறைப்பாடு தொடர்பில் மக்கள் தரப்பில் இருந்தும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தி தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதனையும் பதிவிடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். பொதுநலன் கருதியே இச்செய்தி பதிவிடப்படுகின்றது.)










