இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வழங்கி இருந்தார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு பிரதி அமைச்சர் இன்று நேரில் சென்றிருந்தார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ மற்றும் பெல்மடுல்ல பிரதேச சபை உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.
தற்காலிக வீடு அமைக்கப்பட்டு இருந்த இடத்தினையும் பார்வையிட்டு , தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களையும் சந்தித்து, பிரதி அமைச்சர் விடயங்களை கேட்டறிந்தார். நீலகாமம் தோட்ட மக்களும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி, பிரதி அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக ஆரம்பம் முதல் தமது கவனத்தை செலுத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களும் ஊர் மக்களும் பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன், பிரதி அமைச்சரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
இப்பிரச்சனை தொடர்பாக தொடர்ந்தும் தனது கவனத்தை செலுத்துவதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர்,
குறிப்பிட்ட பிரச்சனைக்கு முகம் கொடுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் சரியான நியாயத்தினை வெகு விரைவில் பெற்று தருவதற்கும், தோட்டங்களில் காணப்படும் தனியார் பாதுகாப்பு படைகள் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய செயற்பாட்டினை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதற்கும் முடிவெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்










