இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பெருந்தோட்ட பகுதிகளில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும், நீலகாமத்துக்கு சென்றவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை முன்வைக்குமாறும் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரிடம் இதற்குரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலும், வீடமைப்பு சம்பவம் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நீலகாமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர் , குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அமைச்சின் அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
மேற்படி பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிருவாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியதுடன் , இவ்வாறு மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதை உடனடியாக நிறுத்தும் படியும் இடித்துரைத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காணியை வழங்குவது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதி அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதேவேளை, நீலகாமத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஐவரினது சம்பளத்தை மீள வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க, மேலதிக செயலாளர் விஜய் கீர்த்தி, தோட்டமுகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு, பணிப்பாளர், அமைச்சின் பிரதான அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதேபோல் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
