பசறை நிருபர்
ஊவா மாகாண நூலக சேவைகள் சபை மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா நிறுவனம் என்பன ஒன்றிணைந்து ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுடைய பங்குபற்றலுடன் “முதலாவது புத்தகம்” (The First Book-2025) என்ற செயற்திட்டத்தினை மாணவர்களின் எழுத்தாக்க திறனை விருத்தி செய்யும் முகமாக முன்னெடுத்திருந்து.
இச் செயற்றிட்டத்திற்கு மாகாணத்தில் உள்ள 800 மாணவர்கள் தமது எழுத்தாக்கங்களை கவிதை, சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, பாடல் , புதினக் கதைகள் மற்றும் சாகச கதைகள் என்ற வடிவில் சமர்பித்திருந்தனர்.
இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 எழுத்தாக்கங்கள் நூல் வடிவில் ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜெயசேகர மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இவற்றில் 13 தமிழ் நூல்களும், 23 சிங்கள நூல்களும், 17 ஆங்கில நூல்களும் அடங்குகின்றன. இந்நூல்களை ஊவா மாகாணத்தில் உள்ள நூலகங்கள், பாடசாலைகளுக்கு வாசிப்பு பயன்பாட்டிற்காக விநியோகம் செய்ய ஊவா மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் மா.ரூபவதனன் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.










