நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி மெக்கலம் டிரைவ் நீர்வீழ்ச்சிக்கு அருகில் விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு, அங்கிருந்து பால்குட பவனி ஆரம்பமானது.
இந்த ஊர்வலமானது லேடி மெக்கலம் டிரைவ் வீதி ஊடாகச் சென்று, உடபுஸ்ஸல்லாவ வீதி, நுவரெலியா வைத்தியசாலை வீதி, ஆவெலியா நவகம்கொட கிராம வீதி மற்றும் கோயில் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும்
பால்குட பவனியைத் தொடர்ந்து, ஆலயத்தில் 1008 நவோத்திர சகஸ்வர சத சங்காபிஷேகம் பக்திப் பூர்வமாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், வருகை தந்திருந்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான முத்தேர்த்திருவிழா நாளை (01.05.2026) காலை திருவிளக்கு பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலய பரிபாலன சபைத் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு











