19 வயது இளைஞனுக்கு எமனான சைக்கிள்: புசல்லாவை பகுதியில் சோகம்!

புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகலை, கித்துல்பெந்த பகுதியில் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில், திடீரென சைக்கிளின் பிரேக் (Breaks) செயற்படாமல் போயுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த குழிக்குள் சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தற்போது இப்பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, சுமார் 10 அடி ஆழம்கொண்ட அந்தப் பள்ளம் முழுமையாக நீரால் நிரம்பிக் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குழிக்குள் விழுந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க,யோகா

Related Articles

Latest Articles