பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!

Update

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 129 பேர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக Soccsksargen பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இப்பகுதியில் நான்கு மாகாணங்களும் ஒரு நகரமும் உள்ளடங்கியுள்ளன.

………….

 

பிலிப்பைன்ஸ் கடற்கரைப் பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என்பது தற்போதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவாகியுள்ளன, மேலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:37 மணிக்கு மிண்டனாவோ தீவில் உள்ள கடலோர நகரமான ஜெனரல் சாண்டோஸிற்கு தென்மேற்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸின் டவாவ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பின.

சுனாமி ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வலியுறுத்தியுள்ளார்.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்சமயம் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் எத்தனை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்ற துல்லியமான விவரம் இன்னும் தெரியவில்லை.

மிண்டனாவோ தீவுக் குழுமத்தில் 2.7 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் முதன்மைத் தீவிலேயே வாழ்கின்றனர்.

தைவான், ஜப்பான், குவாம், பப்புவா நியூ கினியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பல தீவு நாடுகளின் கடல் மட்டங்களிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Articles

Latest Articles