ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவில், பீகார் ஆளுநர் சையத் ஹஸ்னைன் (Syed Hasnain) மற்றும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா (Pavitra Margarita) ஆகியோர் இடம்பெறுவர் என்று அதிகாரப்பூர்வ தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அரசுமுறை இறுதிச்சடங்கு மற்றும் அடக்க உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், இந்தத் தூதுக்குழுவில் பிரதமர் மோடி இடம்பெற வாய்ப்பில்லை
என தெரியவருகின்றது.
ஈரானின் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கமேனி, மத்திய கிழக்கு போர் தொடங்கிய முதல் நாளான கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4-ஆம் திகதி தொடங்கி, ஜூலை 9-ஆம் திகதி கமேனியின் உடல் அடக்கம் செய்யப்படுவதோடு நிறைவடையும்.
இதில் ஜூலை 7 அன்று பரிசுத்த நகரான கோம் (Qom) பகுதியில் நடைபெறும் சிறப்பு சடங்குகள் மற்றும் பிற மத வழிபாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜூலை 4 முதல் தொடங்கும் இந்த 6 நாள் இறுதிச்சடங்கு காலத்தில், லட்சக்கணக்கான துக்கமனுசரிப்பாளர்கள் வீதிகளில் திரள்வார்கள் என ஈரானிய அதிகாரிகள் எதிர்பார்ப்பதால், இந்த இறுதி ஊர்வலம் உலகளவில் உற்றுநோக்கப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மத்திய கிழக்கில் போர் காரணமாக உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவிய போதிலும், டெல்லி , தெஹ்ரானுடனான தனது உறவை சுமுகமாகப் பேணி வந்ததன் மூலம், இந்தியாவும் ஈரானும் பல தசாப்தங்களாக தங்களது நீண்டகால கூட்டாண்மையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இக்காலகட்டத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பலமுறை தொலைபேசி வழியே கலந்துரையாடினர்.
